Tuesday, December 8, 2009

sri lanka election 2009 -kai.arivazhagan

இலங்கையின் அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல், வருகிற ஜனவரி மாதத்தில் என்று அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே தேர்தல் வேலைகள் துவங்கிக் களை கட்டிவிட்டது, இலங்கையில் தமிழர்களைத் திறம்படவும், பேரினவாத வெறியோடும் கொன்று குவித்தது ராஜபக்சா குடும்பத்தினரா? அல்லது பொன்சேகா குழுவினரா? என்று முன்கூட்டியே அறிந்து கொள்வதில் தான் சிங்கள மக்களுக்கு இத்தனை ஆர்வம்!!! இன்னும் ஏறத்தாழ இரண்டு ஆண்டு காலம் வரையில் ஆட்சி புரியும் காலநீட்சி இருந்தும், சிறப்புச் சட்டம் இயற்றி வலிந்து பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை எதிர்கொள்ள இலங்கையின் மக்களும் அரசியல்வாதிகளும் ஆயத்தமாகி விட்டனர், இப்படியான ஒரு தேர்தலை எதிர்கொள்ள இலங்கையின் பொருளாதார நிலை ஆயத்தமாக இருக்கிறதோ இல்லையோ?, சிங்களப் பேரினம் எந்தக் கேள்விகளும் இன்றித் தேர்தல் திருவிழாவை வழக்கத்தை விடவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ ஆயத்தமாகி விட்டது.

இலங்கை எப்பொழுதுமே ஒரு அமைதியற்ற கலவரத் தீவாகவே இருக்க வேண்டும் என்று மண்டல வல்லரசுக் கனவு காணுகிற இந்தியாவும், பெளத்த-மதம் சார்ந்த நெருக்கம் காட்டும் சீனத்தின் இடையிலான ஆளுமைப் போட்டி ஒருபுறமாகவும், மேற்குலக முதலாளி அமெரிக்கா முன்னிலை வகிக்க, மேலும் பல வல்லாதிக்கங்கள், இலங்கை அரசியலில் முடிந்த வரை அறுவடை செய்யக் காத்துக் கிடக்கின்றன. பல்வேறு அரசியல் புறக்காரணிகளின் நடுவமாய் இலங்கை இருப்பதைக் கண்டு உண்மையிலேயே வருத்தப்படுகிற எந்த அரசியல்வாதியும் இல்லாமல் போனது தான் இலங்கை மக்கள் பெற்ற சாபம்.

“தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம்” என்று சிங்களப் பேரினம் கொக்கரித்தாலும், அந்த முற்றுப் புள்ளி இலங்கையின் எதிர்கால அரசியல் முழுவதையும் ஆட்கொள்ளப் போகிற பெருந்தீயின் சிறுதுளி என்பதைக் காலம் தனக்குள் புதைத்துக் கொண்டு காத்திருக்கிறது, காலம் அனுமதிக்கும் வரையில் உண்டு கொழிப்பது, இல்லையா? இருக்கவே இருக்கிறது அமெரிக்கக் குடியுரிமை என்றுதான் இலங்கையின் ஆளும் வர்க்கம் “சந்திரிகா” தொடங்கிக் “கோத்தபாய”, “பொன்சேகா” என்று தனது பட்டியலை விரிக்கிறது.


இப்படி ஒரு இக்கட்டான சூழலில் இந்தத் தேர்தல் தமிழ் மக்களின் விடுதலைக்கும், மேன்மையான வாழ்விற்கும் எந்த விதத்தில் உதவப் போகிறது? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடி நாம் பயணிப்பதற்கு முன்னால், போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிந்து கொண்டு விடுவது நல்லது.

ஒருபுறம் ஆளும் “ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி”யின் வேட்பாளர் தற்போதைய அதிபர் “மகிந்த ராஜபக்ஷே”, இன்னொருபுறம் “ஐக்கிய தேசியக் கட்சி”யும், “ஜனதா விமுக்தி பெரமுனா”வும் இணைந்து களமிறக்கி இருக்கும் “சரத் பொன்சேகா” எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர். இவர்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி என்பது உறுதியாகி விட்ட நிலையில் மூன்றாவது வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர், “இடது முன்னணி”யின் “டாக்டர்.கருணாரத்ன விக்கிரமபாகு”, இம்மூவரையும் தவிர்த்து பெயரளவில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இந்த முதல் இரண்டு வேட்பாளர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்கும் உருவாகி இருப்பது ஏறத்தாழ தங்கள் உரிமைகளுக்கான இறுதிச் சடங்கை அவர்களே நடத்திக் கொள்வது போல இருப்பினும், இடையில் இருக்கும் ஒரு வாய்ப்பு நம்பிக்கை தருவதாக இருக்கிறது, அந்த வாய்ப்பு “இடது முன்னணி”யின் “டாக்டர்.கருணாரத்ன விக்கிரமபாகு” அவர்களை ஆதரித்து வாக்களிப்பதேயாகும், இவருக்கு ஏன் தமிழ் பேசும் மக்கள் ஆதரவு தர வேண்டும்? என்று அறிந்து கொள்வதற்கு முன்னர் முதலிரண்டு வேட்பாளர்களுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


ராஜபக்ஷேவும், பொன்சேகாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மட்டுமில்லை, ஒரே உறையிலிருக்கும், தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரான கூர்வாட்கள். “தமிழர் நலன்”, “தமிழர் விடுதலை” போன்ற சொல்லாடல்களையே வருங்காலத்தில் நசுக்கிப் போடக் காத்திருக்கும் நச்சுப் பாம்புகளில் எது நல்ல பாம்பு? என்பது போன்ற போட்டிதான் இவர்கள் இருவரின் போட்டியும். கடந்த ஆறு தேர்தல்களில் இலங்கையின் வேட்பாளர்கள் அனைவரும் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த “தமிழ் மக்களின் உரிமைகள்” என்ற முன்வடிவைத் தகர்த்ததில் இவர்கள் இருவருக்கும் சரிபங்கு உண்டு. இது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தின், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான போட்டியாகவே “ராஜபக்ஷே VS பொன்சேகா” போட்டியை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ் மக்கள் தேர்தல் என்கிற களத்தைத் தங்கள் தனி அடையாளங்களோடும், தன்மானத்துடனும் எதிர் கொள்ள இயலாதவாறு முடக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள், இவர்களில் பலர் வாக்களிக்கப் போவதில்லை என்றாலும் எஞ்சிய தமிழ் மக்களின் வாக்குரிமை முழுமையான ஒரு தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்க வேண்டுமேயானால் இம்முறை வாக்குகள் சிதறி விடக்கூடாது, மேலும் வாக்குகளைச் சிதறடிக்கும் பல்வேறு காரணிகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவதில் அரசியல் முகவர்களும், மக்களும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இலங்கையின் அரசியலில் கலந்து ஐக்கியமாகி விடுவதற்கு சொல்லப்படுகிற வழிமுறை அல்ல இது, மாறாக ஒருங்கிணைந்து தேசிய விடுதலை என்கிற கனவினை அதற்கான முகாந்திரத்தை அரசியல் ரீதியாக உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு ஒப்பானதாகும்.

இன்றைய இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு இசைவாகவே இயங்கி வருகிறது, “ராஜபக்ஷே அண்டு கம்பெனி” குலை நடுங்கிப் போய்க் கிடக்கிறது, காரணம் வளர்த்த கிடாவின் எதிர்ப் பாய்ச்சல், தேர்தல் வெற்றிக்காக எங்கே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ? “பொன்சேகா” என்று “ராஜபக்ஷே” குடும்பத்தினர் உள்ளூர அச்சம் கொள்வதோடு, இது அரசியல் வழியாகவும் தங்களின் இருப்பிற்கான கடைசிப் போர் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள், மேலும் இந்திய பார்ப்பன-பனியாக் கூட்டத்தின் எதிர்ப்பையும் தங்கள் பக்கமாக அவர்களே திருப்பிக் கொண்டிருக்கிறார்கள், இதற்குக் காரணம் ராஜபக்ஷேவின் சீன – பெளத்த இணக்கம், சீனம் உதவிக் கரம் நீட்டுகின்ற ஒரு மண்டல வல்லாதிக்கம் என்பதையும் தாண்டி உலகப் பொருளாதாரச் சூழலில் அமெரிக்க அடியாளின் மாற்றாக முன்னிறுத்தப் படுவதும் ஒரு காரணம், உளவியல் ரீதியாக சிங்களம் சீனத்தோடு இயற்கையாகவே இணங்கி இருக்கிறது, மத வழிபாட்டு ரீதியாகவும், பொருளாதார கையகப்படுத்தல் வழியாகவும் சிங்களம் சீனத்தோடு கொஞ்சிக் குலாவுவது இந்தியப் பார்ப்பன – பனியாக் கூட்டத்தின் வெறுப்புக்கான முதல் காரணி, பாதுகாப்பு ரீதியில் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த தெற்குப் பகுதியும் இனி தலை வலியாக மாறி விடுமோ? என்று அச்சம் கொள்கிறது இந்திய பனியாக் கூட்டம்.

மேற்குலக நெருக்கடிகளுக்கும், போர்க்குற்றம் என்கிற பூச்சாண்டிக்கும், பயம் கொள்வது போல ராஜபக்ஷே குடும்பத்தினர் இந்திய முதுகில் ஏறிக் கொண்டு மேற்குலகை எதிர்கொள்ளவும், அதே மேற்குலகின் கருவியாக இந்தத் தேர்தலில் பொன்சேகா பயன்படுத்தப்படுவதும் வழக்கமான இலங்கை ஆளும் வர்க்கத்தின் வித்தை தானேயன்றி ஒருபோதும் உண்மையான நட்பு இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. ராஜபக்ஷேவின் வித்தைகளையாவது “தனது இனத்திற்கு உண்மையாக” இருக்கும் வித்தை என்று கணக்கில் கொண்டாலும், பொன்சேகாவை ஒருபோதும் தமிழ் மக்களாலும், சிறுபான்மை இன மக்களாலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது, ஏனெனில் இன்றைக்குச் சிறுபான்மையினரின் வாக்குகளை வேண்டி விரும்பும் பொன்சேகா கடந்த ஆண்டில் இப்படிக் கொக்கரித்தார், " இது சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு, இங்கே சிறுபான்மையினர் எல்லாம் உரிமை கொண்டாட இயலாது" நேரடியாகவே ஒரு பேரின வெறிகொண்ட பொன்சேகாவும், அதற்கு ஆணையிட்டு அள்ளி வழங்கிய ராஜபக்ஷேவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே அன்றி வேறொன்றுமில்லை. போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், பேரினவாத அடக்குமுறையின் போர் வெற்றிக்குச் சொந்தம் கொண்டாடவுமாய் தேர்தலை எதிர்கொள்ளும் இவ்விருவரையும் தமிழ் மக்களும் சரி, ஏனைய சிறுபான்மை மக்களும் சரி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், ஏற்றுக் கொள்ளவும் கூடாது.


இந்த நிலையில் அண்மைக்கால இலங்கை அரசியலின் அணுகுமுறையை சில பொதுவான அலகுகளால் இனம் காண முடியும், பேரினவாத அடக்குமுறை அலகுதான் அது, இந்த அலகில் இருந்து சில நேரங்களில் மாறுபட்டுப் பயணிக்கும் ஒரு வேட்பாளர் தான் “டாக்டர்.குணரத்ன விக்கிரமபாகு”, இவரது அரசியல் செயல்பாடுகள் பெரிய வேறுபாட்டு அளவீடுகள் இல்லாதிருப்பினும், அடிப்படை மாற்றங்களை உள்ளடக்கி இருப்பதே இதற்குக் காரணம், போர் தீவிரமடைந்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டி “சிறுபான்மையினருக்கு எதிரான போரை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தன்னுரிமை மிக்க அரசியல் தீர்வுகளை நோக்கி இலங்கை அரசு நகர வேண்டுமே தவிர போரின் வழியாக நகர்தல் தவறானது" என்கிற அடிப்படை மனித நேயம் மிகுந்த குரலை பாராளுமன்றம் வரையில் கொண்டு சென்றவர் தான் இந்த வேட்பாளர்.

இவை தவிர்த்து இந்த வேட்பாளரைத் தமிழ் மக்களும் சிறுபான்மையினரும் தேர்வு செய்து வாக்களிப்பதற்கு நிறையக் காரணிகள் இருக்கின்றன, அவற்றில் இன்றியமையாத முதல் காரணி. “தமிழ் மக்களின் தன்னாட்சிக் குரலை நெரிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் இருமுனைகளில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, மீண்டும் ஒரு அரசியல் வழியான நெருக்கடியை, அழுத்தத்தை பேரினவாதத்தின் மீது திணிப்பது”, மேலும், குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை இந்த வேட்பாளருக்கு வழங்குவதன் மூலம் “முண்ணனியில் இருக்கும் இரண்டு வேட்பாளர்களும் 50 % திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற இயலாத வண்ணம் முட்டுக்கட்டை இடுவது”. இப்படிச் செய்வதன் மூலம் தமிழ் மற்றும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக எவரும் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற இயலாது என்கிற செய்தியை சிங்களப் பேரினத்திற்கு நம்மால் உரக்கச் சொல்ல முடியும்.


இந்த நகர்வு ஒன்று தான், தமிழ் மக்களின் விடியலுக்குக் காலம் வழங்கி இருக்கும் தன்மானம் நிறைந்த ஒரே வாய்ப்பு, இந்த வாய்ப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும், வகையில் முழுமையான பரப்புரைகளையும், திட்ட முன்வடிவுகளையும் புலத்தில் இயங்கும் அரசியல் தலைவர்களோடு இணைந்து (ஒட்டுண்ணிகள் மற்றும் பல்லக்குத் தூக்கிகளைத் தவிர்த்து) புலம் பெயர்ந்த மக்களும், தாய்த்தமிழ் நாட்டு ஊடகங்களும் சரியாகச் செய்ய வேண்டிய தருணம் இது, விடுதலையை நோக்கிய பயணத்தின் அடுத்த கட்டமாக, இதனை கருத்தில் கொண்டு தேர்தலை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்வது காலத்தின் தேவை. “தேர்தலைப் புறக்கணிப்பது, வாக்குகளைச் சிதறடிப்பது போன்ற செயல்கள் விடுதலைக் கனவை நாமே அழித்துக் கொள்வது போல அறியாமை மிகுந்தது மட்டுமன்றி, வரலாற்றில் மீள முடியாத முடக்கத்தைக் கொடுப்பதும் ஆகி விடும்”. இதனை உணர்ந்து இந்த வரலாற்றுப் பயணத்தில் நமது அரசியல் புரிந்துணர்வை நமது மக்கள் வெளிப்படுத்துவார்களா?? என்கிற கேள்விக்குப் பின்னர் ஒளிந்து கிடக்கிறது தமிழர்களின் தாகமான, தமிழீழத் தாயகம்.-கை.அறிவழகன்

Friday, October 23, 2009

pala.karupaiyah in thinamani

தினமணி கட்டுரை தவறாமல் படிக்கவும் !!!
அடிவயிற்றை முறுக்கவில்லையா?பழ . கருப்பையா


ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே! தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா?

கட்சிகளெல்லாம் கிடக்கட்டும்! எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?

""ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு'' என்று தாய் மகளிடம் சினந்து கேட்டாளாம். ""போனவன் போயிட்டான்; நான் இருக்கேனே'' என்று மகள் புன்முறுவலோடு விடை இறுத்தாளாம்!

""கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்!

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஏதோ வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போல ராஜபட்சவுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறது. பஜ்ஜி மாவுக்குத் தனித்து எந்த மதிப்புமில்லை! அது வெங்காயத்தோடோ, வாழைக்காயோடோ சேரும்போதுதான் அதற்குப் பெயரும் கிடைக்கிறது; வடிவமும் கிடைக்கிறது!

இந்தப் பஜ்ஜி மாவுக்கெல்லாம் வடிவம் கொடுப்பவர் கருணாநிதி என்பது ராஜபட்சவின் எண்ணமாக இருக்கலாம்! அப்படிப்பட்ட கருணாநிதியின் உயிர்நாடியோ, சென்னைக் கோட்டையில் இருக்கிறது. சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ, சோனியாவின் தயவில் இருக்கிறது. சோனியாவோ சிங்களவர்களின் உற்ற நண்பர். ஆகவே, சோனியாவின் தோழமை இருக்கும்வரை இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கத் தேவையில்லை என்பது ராஜபட்சவின் எண்ணம்!

ஆனாலும் விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச "உன் கதையையும் முடித்திருப்பேன்' என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?


"ராஜபட்ச! உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்துவிட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒரு நாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை''-என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே!

ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே! அதுவும் ராஜபட்ச, "ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன்' என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்று கொண்டு, "இரத்தம் கொதிக்கிறது' என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?

அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே!

இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்து கொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?

போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், "நன்றாக இருக்குமா?' என்று திருமாவளவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே!

இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! ""என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை''

முன்பொருமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உச்சத்திலிருந்தபோது மாநிலங்களின் அமைச்சர்களெல்லாம் பங்கேற்ற கூட்டத்தில், செல்வாக்குமிக்க மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய், "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை' என்று பேச, "இந்தி இருக்குமானால், இந்தியாவே இருக்காது' என்று அன்றைய தமிழக அமைச்சர் செ. மாதவன் பேசிவிட்டார் என்பதற்காக, ஊர்ஊராக நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செ. மாதவனை உட்காரவைத்து ஊர்வலம் விட்டு, ஐந்து ஆண்டு அரசியலை இதைச் சொல்லியே ஓட்டினார்களே தி.மு.க.வினர்!



அன்று மாமன்னன் அசோகன் இலங்கைக்குத் தன் மகள் சங்கமித்திரையை அனுப்பிப் பௌத்தத்தை வளர்த்ததுபோல, இன்று தன் மகள் கனிமொழியை அனுப்பிச் சிங்களவர்களோடு நேசத்தை வளர்க்கும் கருணாநிதி, ராஜபட்சவை எதிர்த்துத் திருமாவளவன் பேசுவதை ரசிக்க மாட்டார் என்றாலும், கருணாநிதி ரசிக்காததை எல்லாம் செய்யாமலிருப்பதற்குத் திருமாவளவன் என்ன தி.மு.க.வின் ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளரா?

தமிழுக்கும், தமிழனுக்கும் கேடு என்றால் சீறிவரும் சிறுத்தையாக இருந்தவரை, நாடாளுமன்றப் பதவியைக் கொடுத்து அடங்கிப் போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே கருணாநிதி!

முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரûஸயும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம்!

ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக்கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன?

முள்வேலி முகாம்களில் ஈழத் தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துவதை ஓர் அமெரிக்கப் பெண்மணி சத்தம்போட்டு உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழ்நாட்டுக்கும் வந்து சொல்ல விரும்பியபோது, அவருக்கு "விசா' வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி! அந்தப் பெண்மணியின் வருகை தன்னுடைய சாயத்தை வெளுக்கச் செய்துவிடும் என்னும் அச்சம்தானே காரணம்!

இந்தப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் "உல்லாசப் பயணத்தில்' இங்கிருந்தே இலங்கை அதிகாரிகள் உடன்வந்தார்களாம். கொழும்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாம்; ஹெலிகாப்டர்களில் பறந்தார்களாம்; ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினார்களாம்; முப்பொழுதும் முப்பழங்களோடும் விருந்துகளாம்; வேதமே பாராட்டிய சோமபானங்களுக்கும் குறைவில்லையாம்! அரசியல் நெறியற்ற டக்ளஸ் தேவானந்தா கூட்டிவைத்த கூட்டத்தில் கலந்துரையாடினார்களாம்! இதற்குச் சிங்களவர்களோடேயே உரையாடியிருக்கலாமே!

ஈழத்துக்கான போர் சிங்களக்காடையர்களோடு மூன்றுமுறை நடந்தது; முப்பதாண்டுக் காலம் நடந்தது; அப்போதெல்லாம் இடையிடையே போர் நடக்கும்; சிங்களக்காடையர்கள் முண்டிப் பார்ப்பார்கள்; பின்பு பின்வாங்கி ஓடிப்போவார்கள்.


ஈழத்தில் வரிவசூல் நடந்தது; காவல் நிலையங்கள் இருந்தன; நீதிமன்றம் நடந்தது; பராமரிப்புப் பணிகளும், நிர்வாகப் பணிகளும் செவ்வனே நடந்தன. அந்தக் காலகட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத சுதந்திர நாடாகவே ஈழம் இயங்கியது!

நான்காம் ஈழப் போர் ஈழத்தைச் சுடுகாடாக்கியது. சிங்களக்காடையர்கள் ஒன்றும் ஓரிரவில் வீரர்களாய் மாறிவிடவில்லை. இந்தியப் பெருநாடு சிங்களவர்களை முன்னிறுத்தி அந்தப் போரை நடத்தி இந்தக் கொடுமையை அரங்கேற்றியது!
பாரதி சொன்னதுபோல எல்லாமே "பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே!'

நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே! பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு மருந்தில்லை; கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளை பெற வசதியில்லை.

ஈழத்துக்கு முற்றாக விடுதலை கேட்டவர்கள் இன்று முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து வீட்டுக்குப் போக மட்டும் விடுதலை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார்கள்; இந்த நிலைக்கு இவர்களை ஆளாக்கிய சோனியா காந்தி, கருணாநிதி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபட்சவைச் சந்தித்து,""நாட்டுக்கு விடுதலை கேட்கவில்லையே; வீட்டுக்குப் போகத்தானே விடுதலை கேட்கிறார்கள்; கொடுத்துவிட்டுப் போங்களேன்'' என்று எடுத்துச் சொல்லப் போய் இருக்கிறார்கள்! தமிழனின் தலைவிதியைப் பார்த்தீர்களா?

இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறுவேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?

இப்படிக் கருணாநிதி அறிவித்த மறுநாளே சிங்காரச் சென்னையில் சுவரொட்டிகள் மின்னின. ""நான்கே நாளில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கலைஞரை வணங்குகிறோம்.''


அண்ணா விடுதலை இயக்கமாகத் தோற்றுவித்த ஒரு கட்சியில் விடுதலை என்பதை எவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலம்; அதையும் ரசிக்கிறார் கருணாநிதி என்பதுதான் அதைவிடப் பேரவலம்!

உலகத் தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. ஈழப் பேரழிவுகளுக்குப் பிறகு உலகத் தமிழர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதி நடத்துவதை ஏற்கவில்லை! சில மாதங்களுக்கு இந்த மாநாட்டைத் தள்ளிவைத்து அவர்களை அமைதிப்படுத்தலாம் என்னும் கருணாநிதியின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரை மாற்றி நடத்தப் போகிறார்கள். உலகத் தமிழர்களின் சினம் நியாயமானதுதானே!

உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார்; எம்ஜிஆர் நடத்தினார்; ஜெயலலிதா நடத்தினார்; ஆனால், கருணாநிதியால் நடத்தவே முடியால் போய்விட்டதே!

தமிழைத் தாயாக உருவகிப்பது தமிழர்களின் வழக்கம். தாய் ஒருத்தி; பிள்ளைகள் இருவர்! இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மார்பிலும் தமிழ்ப்பால் சுரந்தாள் அவள்! அவர்கள் இனத்தால், நிறத்தால், ரத்தத்தால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் அனைத்தாலும் ஒன்று; நிலத்தால் மட்டுமே வேறு, வேறு!

அண்மையில் அவளுடைய சிறிய பிள்ளைக்கு ஊறு நேர்ந்துவிட்டது; பொறுப்பாளா அவள்? அந்தப் பிள்ளைக்கு ஊறு விளைவித்த அரக்கன் அழிந்து, அந்தப் பிள்ளை தன்னுடைய மண்ணில் காலூன்றும் வரை உறக்கம் வருமா அவளுக்கு?

அந்தச் சிறிய பிள்ளையின் மண்ணைப்பிடுங்கிக் கொள்ள ஓர் அரக்கன் முயன்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அரக்கனுக்குத் துணைபுரிய தில்லிவாசிகள் விரும்பியதையும் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால், மூத்த பிள்ளையின் மண்ணிலிருந்தே சிலர் தில்லியின் விருப்பத்தின்பேரில் அரக்கனுக்கு உதவியாக இருந்ததைத்தான் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! கண்ணகி அழுததைப் போல் அரற்றி அழுகிறாள் தாய்! தன் இளைய மகனின் வம்சத்தில் எண்பதாயிரம் பேர் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு மாண்டுமடிந்ததை எண்ணி அழுகிறாள். இளைஞர்களெல்லாம் செத்து, இளம்பெண்களே விஞ்சி நிற்கும் கொடுமையை எண்ணி அழுகிறாள். அறத்தை "மடவோய்' என்று வாயாற வைகிறாள். நான் உயிர் பிழைத்திருப்பேனோ என்று அரற்றுகிறாள்!
மறனோடு திரியும் கோல் ""மன்மோகன்'' தவறு இழைப்ப
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ?''
(-சிலம்பு, துன்பமாலை 40).

இளைய பிள்ளையின் வம்சத்தை அழிக்க மூத்தபிள்ளையின் வழியினரில் சிலரே மாற்றானுக்கு உதவிவிட்டு, தன்னுடைய வெக்கை தணியத் தனக்கே விழா எடுக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் விழாவினைப் புறந்தள்ளி விட்டாள் தாய்! உலகத் தமிழ் மாநாட்டை அவள் ஏற்கவில்லை! தாயல்லளோ அவள்!

அது மட்டுமன்று; தமிழ் மாநாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார் கருணாநிதி!

சென்ற மத்திய ஆட்சிக் காலகட்டத்தில் சோனியாவோடு சேர்ந்துகொண்டு ஈழத்தைச் சுடுகாடாக்கியதை இது போன்ற தீர்மானங்களால் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறார் கருணாநிதி!

""ஈழத் தமிழர்களுக்கு எந்தச் சலுகைகள், உரிமைகள் அளித்தாலும் எனக்கு உடன்பாடே! ஆனால், இங்கே ஈழத் தமிழர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை. திபெத்தியர்கள், பர்மியர்கள், வங்கதேசத்தினர் என்று ஏராளமானோர் அகதிகளாய் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மட்டும் மத்திய அரசு தனித்துப் பிரித்துப் பார்க்குமாறு கருணாநிதியால் செய்ய முடியுமா?

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை என்றால் அவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புப் போன்ற எல்லாம் உண்டா? அப்போது தானே அது முற்றான குடியுரிமையாய் இருக்க முடியும்!'' என்றெல்லாம் அடுக்கி அடுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கேட்டாரே! ஒன்றுக்காவது விடை சொன்னாரா முதலமைச்சர் கருணாநிதி?

கருணாநிதி தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசை ஏற்கும்படி செய்ய வேண்டும்; அல்லது அரசை விட்டு வெளியே வந்து அதற்காகப் போராட வேண்டும்!
அப்படியெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு பேச்சுக்குப் போட்டு வைப்போம் என்று, தான் நம்பாததையே தீர்மானமாக்குவது முழு மோசடி இல்லையா?

ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசிலிருந்து என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் அனைவருக்கும் இசைவே!

கருணாநிதியும், சோனியாவும் அந்த இனத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு ஈடுகட்டவும், பாவங்களுக்குக் கழுவாய் தேடவும், எந்தச் சலுகை வேண்டுமானாலும் அளிக்கட்டும்; அளிக்க வேண்டும்! வெறும் 500 கோடி ரூபாயை அளித்துக் கைகழுவி விடும் ஏமாற்று வேலை வேண்டாம்!

ஆனால் அவர்கள் பிறப்பால் ஈழத் தமிழர்கள்; ஈழம் அவர்களின் தாயகம்! அங்கே அவர்களுக்கு வீடு வாசல், நிலம் கரை அனைத்தும் உண்டு. அவர்களுக்குச் சொத்துகளும் அங்கேதான்; சொந்தங்களும் அங்கேதான்!


ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி அரசியலில் ஆக்கம் இழந்த பிறகு.... அது நடக்காதா என்ன? முன்பு தெருவிலிருந்தவர்கள் இப்போது திருவை அடைந்திருக்கிறார்கள்; மீண்டும் திருவை இழந்து தெருவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?

அப்போது தாங்கள் விரும்பும்வண்ணம் தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்!

தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் உண்டு. ஒன்று தமிழ்நாடு; இன்னொன்று ஈழம்!
போர்த் தோல்வி காரணமாகச் சோர்வுற்றிருக்கும் தமிழர்களை விரட்டிவிட்டால், இலங்கை முற்றாகச் சிங்களவர்களின் நாடாகிவிடும் என்பது ராஜபட்சவின் எண்ணம்!

கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, தமிழ்நாடு என்று போனபோன இடங்களில் ஏதாவதொரு உரிமை பெற்று அவர்கள் ஆங்காங்கே இருந்துவிட வேண்டும் என்பதுதான் ராஜபட்சவின் விருப்பம்! அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிவிடும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்காகத்தான் கொடுமைகள் மிகுந்த முள்வேலிச் சிறை முகாம்களின் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறார் ராஜபட்ச!

இறைமகன் ஏசுவை சிலுவையில் அறையக் காரணமான யூத மத போதகர்கள் யாரையாவது ஏசுவின் உண்மைச் சீடர்கள் பதினோரு பேரில் எவனாவது கட்டிப்பிடித்ததுண்டா?

யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், முன் தோன்றிய மூத்த தமிழினத்தைக் கருவறுத்த ராஜபட்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும் சிரித்து மகிழ்வதையும் சிலர் கட்டித் தழுவிக் கொள்வதையும் நிழற்படங்களில் பாருங்கள்!

அடிவயிற்றை முறுக்கவில்லையா?